×

திருமங்கலம் அருகே ஓராண்டிற்கும் மேலாக செயல்படாத ஏடிஎம்: இருந்தும் இல்லாததால் மக்கள் அவதி

 

திருமங்கலம், மே 4: திருமங்கலம் அருகே சாத்தங்குடி கிராமத்தில் உள்ள ஏடிஎம் மையம் கடந்த ஓராண்டாக இயங்காமல் உள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருமங்கலம் அருகேயுள்ளது சாத்தங்குடி கிராமம். இங்கு ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். திருமங்கலம் – தேனி மெயின் ரோட்டில் அமைந்துள்ள இந்த கிராமத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏடிஎம் மையம் திறக்கப்பட்டது. தங்களது அவசரத்தேவைக்கு பணம் எடுக்க 7 கி.மீ தூரம் பயணம் செய்து திருமங்கலம் வரவேண்டிய நிலையில் இருந்த இங்குள்ள மக்கள், உள்ளூரிலேயே ஏடிஎம் மையம் திறக்கப்படதால் அதிகம் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. ஏனெனில், சிறிது காலம் மட்டுமே செயல்பாட்டில் இருந்த இந்த ஏடிஎம் மையம் பின்னர் முழுமையாக முடங்கியது. இதன்படி ஓராண்டிற்கும் மேலாக இந்த ஏடிஎம் மையம் ஒரு காட்சி பொருளாகவே இருந்து வருகிறது. இதனை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சாத்தங்குடி கிராமமக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் வங்கி அதிகாரிகள் அதனை கருத்தில் கொள்ளவில்லை. எனவே இப்பிரச்னையில் உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே இந்த கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

The post திருமங்கலம் அருகே ஓராண்டிற்கும் மேலாக செயல்படாத ஏடிஎம்: இருந்தும் இல்லாததால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Satangudi village ,Chhatangudi Village ,Tirumangalam ,
× RELATED பட்டம் விடும் போது தவறி விழுந்து...